கருத்து கணிப்பு மூலம் சிலபேர் கனவு காண்கிறாங்கப்பா.... ஸ்டாலினை கலாய்க்கும் மு.க. அழகிரி
சென்னை: கருத்து கணிப்பு மூலம் சிலபேர் கனவு காண்பதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார் மு.க. அழகிரி.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம், அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இக் கருத்துக் கணிப்பில், தேர்தல் இன்று நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்திருந்தனர்.
அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியிருந்தனர். அதாவது அ.தி.மு.க.வை விட 1.5%தான் தி.மு.க.வுக்கு ஆதரவு குறைவு.
அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் ஜெயலலிதா முதலிடத்தையும், ஸ்டாலின் 2வது இடத்தையும், கருணாநிதி 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவிற்கு 32%, மு.க.ஸ்டாலினுக்கு 28%, கருணாநிதிக்கு 21.33%, விஜயகாந்திற்கு 6.24%, அன்புமணிக்கு 2.27%, வைகோவுக்கு 1.85% சதவீதம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் இந்த கருத்துக்கணிப்பு குறித்து கேட்டபோது, தி.மு.க. என்றால் அது கருணாநிதிதான். அவரை தவிர வேறு யாரும் இல்லை. கருத்து கணிப்புகள் மூலம் சிலர் கனவு காண்கிறார்கள் என்று கூறிவிட்டு சென்றார்.