மவுலிவாக்கம் விபத்து- அனைத்து கட்சிகளையும் இணைத்து போராட்டம் நடத்த முயற்சிப்போம்: மு.க.ஸ்டாலின்
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சிகளையும் இணைத்து போராட்டம் நடத்த முயற்சிப்போம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இன்று திமுகவினர் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். பின்னர் ஆளுநர் ரோசையாவிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
மவுலிவாக்கம் பகுதியில் இரண்டு கட்டிடங்களுக்கு ஜி.ஓ. வழங்கப்பட்டிருக்கிறது. அரசாணை வழங்கப்பட்டிருக்கிறது. வழங்கப்பட்டிருக்க கூடிய இந்த அரசாணையில் எந்த வித விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எந்த நிபந்தனையோடு அதை கட்டிட வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல சி.எம்.டி.ஏ. ஒரு கட்டிடத்திற்கு அனுமதி தருகிறபோது எந்தெந்த நிலையில் இருக்கிறதோ அந்த துறைகளெல்லாம் பரிந்துரை செய்யவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இந்த கட்டிடங்களை பொறுத்தவரையில் குறிப்பாக உள்ளாட்சித்துறையாவது பரிந்துரை செய்திருக்கிறதா என்றால் உள்ளாட்சித்துறை தெளிவாக பரிந்துரை செய்யவில்லை என்பதை நாங்கள் தெளிவாக ஜி.ஒ.விலே நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்.
அது மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட் உடைய உத்தரவு படி பார்த்தால் மக்களுடைய பாதுகாப்பில் தான் இந்த விதிமுறைகளின் அடிப்படையிலே விதிவிலக்கு வழங்கிட வேண்டுமென்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் இந்த துறையினுடைய அமைச்சராக இருக்கக்கூடியவர் இது குறித்து பேசுகிறபோது ஒன்றை குறிப்பிட்டிருக்கிறார்.
தவறான தகவல் தரும் அமைச்சர்
மண் ஆய்வுக்கும், சி.எம்.டி.ஏ.க்கும் சம்மந்தம் இல்லை கட்டிட பராமரிப்புக்கும், சி.எம்.டி.ஏ.க்கும் சம்மந்தம் இல்லை என்று ஒரு தவறான செய்தியை சட்டமன்றத்திலே பேசி அதுவும் அவைக்குறிப்பிலே பதிவாகியிருக்கிறது.
அது மட்டுமல்ல இந்த கட்டிடத்தை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் சென்ற போது அப்போது பத்திரிகையாளர்களிடத்திலே அவர் சொல்கிறபோது எந்த வித விதிமுறையும் மீறப்படவில்லை. என்று பேசிவிட்டு, அதற்கு பிறகு ஒரு தனி நபர் கமிஷனை நியமித்திருக்கிறார். சில அதிகாரிகளை கொண்டு ஒரு குழுவையும் ஆய்வு செய்வதற்கு அதுவும் அமைத்திருக்கிறார்.
ஆகவே முதலமைச்சரே ஏற்கெனவே தீர்ப்பு தந்துவிட்ட பிறகு தனி நபர் விசாரணை மூலமாகவோ, அல்லது அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு மூலமாகவோ, நிச்சயமாக நியாயம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
அனைத்து கட்சி போராட்டம்?
எனவே தான் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்காக தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று கவர்னரிடத்திலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலே மனுவை தந்திருக்கிறோம். அவரும் அதை படித்துப் பார்த்துவிட்டு இதை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று எங்களிடம் கூறியிருக்கிறார்.
கேள்வி: அ.தி.மு.க. அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: அதை மூடி மறைக்கத்தான் ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம். ஜி.ஒ. காப்பி என்னிடம் உள்ளது. அதில் கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கட்டிடத்திற்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் வெறுமனே அனுமதி வழங்கியிருப்பது, இதுவே பெரிய சாட்சி. அதனால் கண்டிப்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கேள்வி: இந்த கட்டிட விபத்துக்கு மற்ற அனைத்துக் கட்சிகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர்களையும் இணைத்து போராட்டம் நடத்த முயற்சி செய்வீர்களா?
பதில்: முயற்சி செய்யப்படும்.
கேள்வி: ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அறிவித்திருந்தபோதும் நீங்கள் சிபிஐ விசாரணை கேட்கிறீர்கள் இதை பெறும் வரை இந்தப் போராங்கள் தொடருமா? அது எப்படிப்பட்ட போராட்டமாக இருக்கும்.
பதில்: எங்கள் கோரிக்கைகளை எல்லாம் மனுவாக்கி அளித்துள்ளோம். கண்டிப்பாக போராடுவோம். அதைப் பற்றி கருணாநிதி பிறகு அறிவிப்பார். பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.