அறிந்து அறிந்து செய்யும் பாவத்தை எல்லாம் அழுது அழுது தொலைக்க வேண்டியிருக்கும்: ஸ்டாலின் எச்சரிக்கை
காஞ்சிபுரம்: நீங்கள் தமிழக மக்களுக்கு அறிந்து அறிந்து செய்யும் பாவத்தை எல்லாம் அழுது அழுது தொலைக்க வேண்டிய நிலை வரும் என்று ஜெயலலிதாவை எச்சரிப்பதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேசினார். தனது பயணத்தின்போது அவர் பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதற்கிடையே அவர் மதுரையில் கேள்வி கேட்கும் பேரணி, கடலூரில் நீதி கேட்கும் பேரணி, திருப்பூரில் விடியல் மீட்பு பேரணி பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்தி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள ஆப்பூரில் திமுக சார்பில் இன்று உறுதி முழக்கப் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசுகையில்,
இந்தியாவிலேயே தேர்தல் நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் சொந்த மாநில மக்களையே சந்திக்காத ஒரே முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தான். தனது சொந்த தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோது கூட காரில் அமர்ந்து கொண்டு இரண்டு விரலை காட்டியவர். வேறு எந்த மாநிலம் ஏன் எந்த நாட்டிலாவது இந்த கொடுமை நடந்திருக்கிறதா?
இந்த வேளையில் நான் ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கையாக ஒன்றை கூறிக் கொள்கிறேன். நீங்கள் தமிழக மக்களுக்கு அறிந்து அறிந்து செய்யும் பாவத்தை எல்லாம் அழுது அழுது தொலைக்க வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கிறேன். ஏமாற்றிவிட்டோம் என்று ஏளனம் செய்ய வேண்டாம். எம் தமிழ் மக்கள் என்ன இளிச்சவாயர்களா? அவர்கள் பொங்கி எழுவார்கள்.
86 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி, பெண் போலீஸ் அதிகாரி விஷ்ணு ப்ரியா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். அண்மையில் போலீஸ் அதிகாரி ஹரீஸ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர்கள் எல்லாம் தற்கொலை செய்ய என்ன காரணம், யார் அவர்களை மிரட்டினார்கள் என்ற உண்மை திமுக ஆட்சிக்கு வந்த வேகத்தில் தெரிய வரும். இது போன்ற தற்கொலைகளை நடக்க இந்த ஆட்சியே காரணம்.
அதிகாரிகளின் தற்கொலைக்கு மட்டும் அல்ல செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்திற்கும் ஜெலலிதா தான் பதில் சொல்ல வேண்டும். இந்த 5 ஆண்டுகளாக நடக்கும் ஊழல்களுக்கு நீங்களே பதில் அளிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையில் அரசியல் குறுக்கீடு இருக்காது.
அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், சத்துணவு ஊழியர்கள் போராட்டம், மாற்றுத்திறனாளிகள் போராட்டம், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவை நடப்பது இந்த ஆட்சியின் கையாளாகாத தனத்தையே காட்டுகிறது.
இந்த லட்சணத்துல அம்மா கால் சென்டர், அம்மா சேவை மையம், அம்மாவை தொடர்பு கொள்ள 1100. ஏற்கனவே 110 விதியின்கீழ் 111 போட்டதில் அதற்கு அருகில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து 1100 என்று ஒரு சேவை மையம். சாகுற நேரத்தில சங்கரா சங்கரா என்பது போன்று ஆட்சி முடியும் நேரத்தில அம்மா சேவை மையம்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியாளர்கள் மக்களை தேடி வந்து உங்களின் குறைகளை கேட்பார்கள். சேவை உரிமை சட்டத்தின்கீழ் அரசு அலுவலகங்களுக்கு நீங்கள் அலைய வேண்டாம். ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் கூட அது உங்கள் வீடு தேடி வரும் வகையில் ஆட்சியை அளிப்போம்.
அதிமுக ஆட்சியில் சீரழிந்து, செயலிழந்து இருக்கும் நிர்வாகத்தை மீட்டெடுக்க வேண்டும். சேவை உரிமை சட்டம் வந்தால் தான் மக்களை காப்பாற்ற முடியும். அதனால் அந்த சட்டம் கொண்டு வரப்படும்.
நமக்கு நாமே பயணத்தின்போது நான் மக்களை சந்தித்து 4 லட்சம் மனுக்களை பெற்றேன். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட உள்ளதையே நமக்கு நாமே உறுதி செய்துள்ளது. இந்த பயணத்தை பிற கட்சியினரும் பாராட்டியுள்ளனர்.
ஜெயலலிதா அறிவித்த 53 வாக்குறுதிகளில் 50 நிறைவேற்றப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications