ஜெ.வுக்காக ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்துவதா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்
சென்னை: ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வந்ததால் நோயுற்றவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை தவிக்க விடுவதா என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

முதல்வர் ஜெயலலிதா இடைதேர்தலை ஒட்டி தொகுதிக்கு வருகை தர முடிவு செய்திருக்கும் காரணத்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்று வந்த அனைத்து செயல்பாடுகளும், நேற்று திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுடைய ஆதரவை பெறுவதற்கான தேர்தல் பிரச்சாரம் பலத்தை காட்டுவதும், பகட்டாரவாரம் செய்வதுமான செயலாக மாறியிருக்கிறது.
ஜெயலலிதா வருகைக்கு திட்டமிடப்பட்ட பல மணி நேரங்களுக்கு முன்னரே வட சென்னை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளின் எல்லா முக்கிய சாலைகளும் காவல்துறையினரால் முற்றிலுமாக தடுக்கப்பட்டதால் சென்னைவாசிகள் நேற்று முன்தினம் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த குழப்பங்களுக்கு மத்தியில், 200 மீட்டர் தொலைவிலேயே இருந்த அருகாமை அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், ஆம்புலன்ஸ் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு அரை மணி நேரத்துக்கு மேலாக தவித்துக் கொண்டிருந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, அந்த ஆம்புலன்ஸில் இருந்த நோயுற்றவரை காப்பாற்றும் பொருட்டு பொதுமக்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் உயிருக்கு எந்த மதிப்பையும் தராத அரசின் இரக்கமற்ற தன்மையையே இது காட்டுகிறது. பொதுமக்கள் சேவைக்காக அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் விதமா இது?
இப்படியான கேலிக்கூத்துகளுக்கு மேலதிகமாக, தங்களுடைய இலாகாவை கவனிக்காமல் அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் ஆர்.கே..நகர் தொகுதியில் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு தனி நபரின் அகந்தை, ஆசை மற்றும் பகட்டை திருப்திபடுத்துவதற்காக மாநில அரசு இயந்திரம் இயங்குவது பயங்கரமானது. எதற்காக தேர்தெடுக்கப்பட்டதோ அந்த ஆட்சி புரியும் பணியை மேற்கொள்ளாமல் பிரார்த்தனைகள் செய்வதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசியல் சதியால் இந்த இடைத்தேர்தல் (இடையில் வாங்கப்பட்ட தேர்தல்) தன் மீதும், மக்கள் மீதும் திணிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கூறுவது வேடிக்கையானது. இதில் உள்ள எளிய உண்மை என்னவென்றால், முதல்வரின் ஊழல் செயல்களின் காரணமாகவே இடைத்தேர்தல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதே தவிர வேறொன்றுமில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications