பிரேசிலைக் கலக்கிய சென்னையின் தெருவோர "தங்கங்களுக்கு" மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னை: பிரேசிலல் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான உலக நாடுகளின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை அள்ளிக் கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்த சிறார்களுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு வாழ்த்தும் கூறினார்.

இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள பதிவு:
பிரேசிலில் நடைபெற்ற "தெருவோர குழந்தைகளுக்கான உலக நாடுகளின் ஒலிம்பிக் போட்டி"யில் பங்கேற்று, 100 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று திரும்பிய ஹெப்சிபா மற்றும் 400மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சினேகா, குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறுவன் அசோக் ஆகியோரை கருணாலயா அமைப்பின் நிர்வாகிகளுடன் சந்தித்தேன்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, உலக ஒலிம்பிக் போட்டியில் விருதுகளை வாங்கி சாதனை படைத்த அவர்களை வாழ்த்தினேன். அரிய சாதனையை செய்திருக்கும் இவர்களை தமிழக அரசின் அதிகாரிகள் கூட சென்று விமான நிலையத்தில் வரவேற்கவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது மட்டுமின்றி வேதனைக்குரியது.

2016 மே மாதம் அமையும் கழக அரசில் தமிழக விளையாட்டு வீரர்கள் உலக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வாங்கிக் குவிக்கும் அளவிற்கு அனைத்து வசதிகளும், பயிற்சிகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறி, அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை கூறி அவர்கள் மென்மேலும் இது போன்ற பல தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்து தமிழகத்திற்கும், நாட்டிற்கும் புகழ் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications