திமுக பொதுச் செயலாளர் ஆகிறார் முக ஸ்டாலின்... அன்பழகனுக்கு ஆலோசகர் பதவி?
சென்னை: திமுகவின் பொருளாளராக உள்ள முக ஸ்டாலின் அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக பதவி உயர்த்தப்படுகிறார். இப்போது பொதுச் செயலாளராக உள்ள அன்பழகன், கட்சியின் ஆலோசகர் என்ற புதிய பதவியில் அமர்த்தப்படுவார் என்று தெரிகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மீண்டும் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாத ஒன்றிய, நகர, பகுதி அளவில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி முதல் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 65 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் 60 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
எஞ்சியுள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிடும்.
இந்த தேர்தல்கள் அனைத்தும் முடிந்த பின்னர் ஜனவரி 9-ந்தேதி மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
தி.மு.கவின் தலைவராக மீண்டும் கருணாநிதியையே தொடர்ந்து தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இப்போது கட்சியின் பொதுச்செயலாளராக அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளராக ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்களாக துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
முக ஸ்டாலினை அடுத்த தலைவராக, முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்துவதில் மும்முரமாக உள்ளது திமுக தலைமை.
எனவே பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். எனவே அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரை கட்சியின் பொதுச் செயலாளராக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
93 வயதான தற்போதைய பொதுச்செயலாளர் அன்பழகன் கட்சியின் ஆலோசகராக செயல்பாடுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications