ஓகியால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அழுத்தம் தேவை- ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரக் கோரி தமிழக ஆளுநரை ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
சென்னை: ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வேண்டும்; காணாமல் போன மீனவர்களின் உடல்களையாவது கொண்டுவர வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி கன்னியாகுமரி மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கன்னியாகுமரியில் ஆய்வுகளை மேற்கொண்டார். அதேபோல் மீனவர்களை மீட்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, மீனவர்கள் மீட்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஓகியால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்குமே நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை தேவை எனவும் ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.