திருமாவளவனுடன் ஸ்டாலின் ஆலோசனை- விஜயகாந்துடனும் ஓரிரு நாளில் சந்திப்பு?
திமுக மாநில மாநாடு திருச்சியில் பிப்ரவரி 15, 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழை திருமாவளவனை நேற்று நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வழங்கினர்.
பின்னர் லோக்சபா தேர்தல் தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது திமுகவின் கூட்டணியில் தேமுதிக இடம்பெற சம்மதித்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியதாகத் தெரிகிறது. தேமுதிகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இக் கூட்டத்துக்குப் பின் விஜயகாந்த்தை ஸ்டாலினும், கருணாநிதியை விஜயகாந்த்தும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திருச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெறும் திமுக மாநாட்டில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கச் செய்யும் எண்ணத்தில் திமுக தலைமை செயல்பட்டு வருகிறது. எனவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட திமுக திட்டமிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக வெளிப்படையாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.