மணப்பாடு படகு விபத்து.. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
மணப்பாடு படகு விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் பாரம் தாங்காமல் படகு கடலுக்குள் கவிழ்ந்தது. இதில் 10 பலியாகினர்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
''தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, மணப்பாடு பகுதியில் கடலில் படகு கவிழ்ந்து பத்து பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
கழக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எனது அறிவுறுத்தலின் படி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி இருக்கின்றார். எத்தனை தான் ஆறுதல் சொன்னாலும் இழந்தவர்களின் குடும்பத்தினரின் துயரங்களை தணிக்க இயலாது. இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் எப்பாடு பட்டேனும் உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
ஆகவே கடலுக்குள் படகில் பயணம் செய்ய விரும்புவோர் மிகவும் பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசும் அதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.'' இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.