திமுக கூட்டணியில் சேர துணை முதல்வர் பதவி கேட்டதா தேமுதிக? மு.க. ஸ்டாலின் விளக்கம்
சென்னை: கூட்டணியில் சேருவதற்கு நிபந்தனையாக துணை முதல்வர் பதவியை தேமுதிக கேட்டதாக வெளியான செய்திகள் குறித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே என்ற தலைப்பில் விடியல் மீட்பு பயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடினார்.

3 கட்டமாக பயணத்தை முடித்த அவர் சென்னையில் கடந்த மாதம் 6-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 233 தொகுதியையும் முடித்து இன்று நிறைவாக 234-வது தொகுதியாக தியாகராயர் நகர் சென்றார். அங்கு வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது ஸ்டாலின் கூறியதாவது:
கேள்வி: 234 தொகுதிகளிலும் மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது?
பதில்: 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதா ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் மக்கள் மனதில் காணமுடிகிறது.
கேள்வி: பல்வேறு தொகுதிகளில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராகவே மக்கள் நினைக்கிறார்களே?
பதில்: நீங்கள் நினைப்பது நிறைவேறட்டும்.
கேள்வி: நமக்கு நாமே பயணத்தை பலர் கேலியும், கிண்டலும் செய்தார்களே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இந்த பயணத்தை பல தலைவர்கள் விமர்சித்தார்கள். அதை நான் ஊக்கமாகவே பார்க்கிறேன்.
கேள்வி: நமக்கு நாமே பயணத்தின் வெற்றி தேர்தலில் பிரதிபலிக்குமா?
பதில்: கண்டிப்பாக தேர்தல் சமயத்தில் பிரதிபலிக்கும்.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்பதாக சொல்லப்படுகிறதே?
பதில்: அப்படி யார் சொன்னது? விஜயகாந்த் சொன்னாரா? நீங்களாகவே யூகித்துக் கொண்டு கேள்வி கேட்டால் எப்படி?
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
கருணாநிதியிடம் வாழ்த்து
முன்னதாக நமக்கு நாமே பயணம் நிறைவடைவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.












Click it and Unblock the Notifications