கருணாநிதி கற்றுக்கொடுத்தது.. ஆகப்பெரும் பிரச்சனையை சாதுர்யமாக கையாண்ட ஸ்டாலின்!
திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடந்த களேபரத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடந்த களேபரத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். மிகப்பெரிய கலவரமாக வேண்டிய விஷயத்தை ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு உள்ளார்.
உடல்நல குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
நேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

குடும்பத்துடன் சென்று கேட்டார்
கருணாநிதியின் உடல்நிலை, மிகவும் மோசமான கட்டத்தை எட்டியவுடன், ஸ்டாலின் நேரடியாக சென்று முதல்வர் பழனிசாமியை பார்த்தார். மெரினாவில் இடம் ஒதுக்குவது குறித்து பேசினார். அதோடு விடாமல் குடும்பத்தோடு சென்று முதல்வரை பார்த்தார். பின் எல்லோரும் அறியும் வகையில் மனுவும் கொடுத்தார். வெளிப்படையாக பேட்டியிலும் இதை தெரிவித்தார்.

ஏற்பாடு
ஆனால் முதல்வர் இவருக்கு பிடி கொடுத்து பேசவில்லை. இதனால், உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டிய விஷயங்களை கருணாநிதி இறப்பதற்கு முன்பே செய்து வைத்து இருக்கிறார் ஸ்டாலின். ஆம், செவ்வாய் கிழமை காலையே ஸ்டாலின் மூன்று வழக்கறிஞர்களிடம் இதற்கான ஆவணங்களை தயார் செய்ய கூறியுள்ளார். அதோடு மெரினா தொடர்பான வழக்கு விவரங்களை சேகரிக்க சொன்னார்.

அமைதி காக்க சொன்னார்
அதன்பின் அரசு முறையாக, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் ஸ்டாலினின் கோரிக்கையை மறுக்கிறது. தமிழகம் முழுக்க போராட்டம் ஏற்படும் நிலை உருவாகிறது. ஸ்டாலின் நினைத்து இருந்தால், ஒரு நாளில் இதை பெரிய போராட்ட களமாக மாற்றி இருக்கலாம், ஆனால் அமைதியாக தொண்டர்களிடம் அமைதி காக்கும்படி கூறினார்.

மோசமான சூழ்நிலையிலும் வழக்கு
மிக மோசமான சூழ்நிலையில், அப்பாவை இழந்துவிட்ட, தலைவரை இழந்துவிட்ட அந்த நேரத்தில் கூட இரவோடு இரவாக கோர்ட் படிகளில் ஏறினார். ஸ்டாலினின் முதல் போராட்டம் இங்குதான் ஆரம்பிக்கிறது. இவ்வளவு மோசமான சூழ்நிலையை யார் இவ்வளவு நேர்த்தியாக கையாள்வார்கள் என்று தெரியாது, ஆனால் ஸ்டாலின், தொண்டர்களை அமைதிப்படுத்திவிட்டு வழக்கு தொடுக்கும் பணியில் இறங்கினார்.

பின்பக்கம் நடந்த வேலை
அதே சமயம் சில அறிவுப்பூர்வமான வேலையையும் ஸ்டாலின் பின்னின்று செய்திருந்தார். மெரினாவில் அடக்கம் செய்வது தொடர்பான 5 முக்கியமான வழக்குகளை வாபஸ் பெற வைத்தார். விடாப்பிடி நபரான, டிராபிக் ராமசாமியை மனம் மாற வைத்தார். காலையில் மெரினா வழக்கில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

விடாப்பிடி
அதே சமயம் சில விஷயங்கள் ஸ்டாலின் விட்டுக்கொடுக்கவில்லை. அதில் முக்கியமானது சுயமரியாதை. வழக்கு நடக்கும் போதே, காலையிலேயே மெரினாவில்தான் கருணாநிதியை புதைப்பேன் என்று உறுதியாக கூறினார். பெரிய பரபரப்பு நிலவி வந்த சூழ்நிலையில் கூட அவர் விடாபிடியாக அவரது கொள்கையில் உறுதியாக இருந்தார்.

யார் வளர்ப்பு!
அவரின் இந்த வெற்றிக்காக எல்லோரும் அவரை பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக கருணாநிதி எப்படி போராட்டக்காரரோ அதேபோல ஸ்டாலினும் பெரிய போராட்டக்காரர் என்பதை நிரூபித்து இருக்கிறார். கடைசி நொடியிலும் கைவிடாமல் கொள்கையில் உறுதியாக நின்று வெற்றிபெற்று இருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் பயணம் இப்படித்தான் தொடங்கி இருக்கிறது!












Click it and Unblock the Notifications