ஆளுநரே சொல்லியாச்சி.. முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள்.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி
சென்னை: ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திவரும் முதல்வர் - துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில், நேற்று, கல்வி சார்ந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர் கல்வித்துறையில் ஊழல் மலிந்து இருந்ததாக குறிப்பிட்டார்.
துணை வேந்தர்கள் நியமனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் புரண்டதாக தெரிவித்தார்.
[டோல் பிளாசா ஊழியர்களை போட்டு தாக்கிய பாஜக எம்பி, ஆதரவாளர்கள்! ]
ஆளுநர் பேச்சு
ஆளுநரே இவ்வாறு கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
|
ஊழல் புகார் அளித்தோம்
"தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்"என தமிழக ஆளுநர் அவர்களே பொதுமேடையில் குற்றம்சாட்டியிருக்கிறார். இப்போது வாய்திறக்கும் ஆளுநர்,கடந்த ஒருவருட காலத்தில் திமுக ஆதாரத்தோடு புகாரளித்தும் ஊழல் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?
|
பதவி நீக்கம்
அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர், இப்படி ஊழல்பற்றி பொதுமேடைகளில் பேசுவது எவ்வித பலனையும் கொடுக்காது!
ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திவரும் முதல்வர் - துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!
ஆளுநருடன் சந்திப்பு
இவ்வாறு ஸ்டாலின் ட்வீட்டுகளில் தெரிவித்துள்ளார். ஆளுநரின் பேச்சு ஆளும் கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று ஆளுநர் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.