சட்டசபை வளாகத்தில் இவ்வளவு போலீஸ் ஏன்?- ஸ்டாலின் ஆவேசம்
தமிழக சட்டசபையில் எதற்காக இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உயரதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை: சட்டசபையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கெடுபிடி அதிகம் உள்ளதால் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழக சட்டசபையில் 2017-2018 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அரசு தாக்கல்செய்யப்போகும் பட்ஜெட் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோட்டை நுழைவுவாயில் மற்றும் தலைமைச் செயலக வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை வளாகம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த சோதனைக்குப் பிறகே உறுப்பினர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டசபை வளாகத்திற்கு உள்ளே வந்த போதும் போலீஸ் கெடுபிடி அதிகரித்தது. சட்டசபைக்குள் நுழைந்த போது, காவல்துறை அதிகாரிகளின் பெயரைக் கேட்டார் மு.க.ஸ்டாலின். அவர்களின் பெயர்களை துண்டுச்சீட்டில் குறித்துக்கொண்டார். தொடர்ந்து அவர், பேரவையில் எதற்கு இத்தனை கெடுபிடி என்று கேட்டு உயரதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஸ்டாலின்.