திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மு.க.ஸ்டாலின்: ராமானுஜரை தரிசித்தார்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூரில் உள்ள திருக்கோட்டியூர் ஆலயத்திற்கு சென்று பிரனவ் மந்திரமான ஓம் நமோ நாராயணாவை ராமானுஜர் பாடிய அஸ்டாங்க திவ்ய விமானத்தில் ஏறி பார்வையிட்டார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த 20ம்தேதி நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். அங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை புறநகர், மாநகர் மாவட்ட பகுதிகளுக்கு அவர் சென்றார். தனது பயணத்தின் 10ம் நாளான இன்று சிவகங்கை மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் தொடங்கினார்.
மக்களிடம் குறைகேற்பு
திருப்பத்தூர் புதுத்தெருவில் அவர் கட்சி கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது பலரும் ஸ்டாலினிடம் மனுக்களை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட அவர் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
திருக்கோஷ்டியூர் கோவில்
திருக்கோஷ்டியூர் சென்ற மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் 108 வைணவத்தலங்களில் ஒன்றான சவுமிய நாராயண பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தார். அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோபுர தரிசனம்
இதை தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர். கோவிலில் ராமானுஜர் சிலைகள், திருக்கோஷ்டியூர் நம்பி சிலைகளை அவர்கள் பார்வையிட்டனர்.
புரட்சி செய்த மகான்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கலைஞர் மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தொடரை எழுதி வருவதை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அப்போது எனக்கும் அவரது வாழ்க்கையை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதன்டிப்படையிலேயே நான் இங்கே வந்து பார்வையிட்டேன் எனக்கூறினார்.
மாணவர்கள் வருகை
கோவிலுக்கு மு.க.ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்ததும், அங்கு ஏராளமான மாணவர்கள் திரண்டனர். அவர்களிடமும், பக்தர்களிடமும் மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து திருப்பத்தூர் வந்த அவர், அங்குள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் வர்த்தகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து குறைகள் கேட்டார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள்
திருப்பத்தூரில் உள்ள உழவர் சந்தைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், சந்தை செயல்படும் விதத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடினார். அப்போது குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தென்னரசுவிற்கு மரியாதை
தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவரை தென்னரசுவின் மனைவி ஜாக்குலின் வரவேற்றார். நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிந்து காரைக்குடி புறப்பட்டு சென்றார்.