ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 4-ஆவது முறையாக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு
ஜூனியர் உலக கோப்பையில் 4-ஆவது முறையாக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை : நியுஸிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் மோதிய ஆஸ்திரேலியாவை 47.2 ஓவர்களில் ஆல்அவுட்டாக்கிய இந்திய அணி 38.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4வது முறையாக இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதற்கு சீனியர் வீரர்கள் ஜூனியர் வீரர்களை பாராட்டிய வண்ணம் உள்ளனர். அது மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களும் இதை கொண்டாடி வருகின்றனர். இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் ,19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சாதனை படைத்துள்ள இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுநாள் வரை, யு-19 உலக கோப்பையை எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றதில்லை. நியூஸிலாந்தில் உள்ள மவுன்ட் மவுங்கனுயி நகரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மகத்தான வெற்றிபெற்று, முதல்முறையாக இந்திய அணி 4-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இத்தகைய மாபெரும் சாதனையை நிகழ்த்தி நாட்டிற்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள கேப்டன் பிருத்விஷா தலைமையிலான கிரிக்கெட் அணிக்கும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ராவிற்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.