3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
கரூர்: கரூரில் வசதியற்ற 3 ஏழைக் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை வழங்கினார் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்எல்ஏ காமராஜ்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் அதிமுகவைச் சேர்ந்த காமராஜ். இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்து தனது எம்.எல்.ஏ. பதவிக்கான மாதச் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் கரூர் மாவட்டதிற்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஏழை மாணவனின் மருத்துவபடிப்புக்கு ஊக்கநிதி, மனநலம் பாதித்த குழந்தைகளுக்கான உதவி என மாதா மாதம் வழங்கி வருகிறார்.
இடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தனது மாதச் சம்பளத்தை கோவில்களுக்கும், பிறவற்றுக்கும் தானமாக அளிக்கவும் செய்தார்.

இந்த நிலையில், இன்று ஆத்தூரில் வசிக்கும் சுகன்யா என்பவருக்கு ஹிரண்யா அறுவை சிகிச்சைக்காகவும், தீபக் என்பவருக்கு மூலநோய் மேல் சிகிச்சைக்காவும், விஜயலட்சுமி என்பவருக்கு புற்றுநோய் மேல் சிகிச்சைக்காவும் தனது 40வது மாத ஊதியத்தை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் எம்.எல்.ஏ காமராஜ்.
நிதி உதவியை பெற்று கொண்ட பயனாளிகள் தமிழக முதல்வருக்கும், எம்.எல்.ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications