ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை... அதிமுக சுவரொட்டியால் நெல்லையில் பரபரப்பு !
நெல்லை: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை என அதிமுகவினரே ஒட்டிய சுவரொட்டிகளால் திருநெல்வேலி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்தவர் நயினார் நாகேந்திரன். கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்தார்.
நெல்லை சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ-வாக இருந்து வரும் நயினார் நாகேந்திரன் சமீப காலமாக கட்சியின் தலைமையால் ஓரங்கட்டப்பட்டு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமல் உள்ளார். இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் வெற்றி பெற்ற நெல்லை சட்டசபை தொகுதியை குறி வைத்து ஆளுங்கட்சியை சேர்ந்த பலரும் காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் கீழ் கல்வெட்டு ஒன்று உள்ளது, அதில் நேற்று ஒரு விநோத சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில், நயினார் நாகேந்திரன் புகைப்படத்துடன் ‘எம்.எல்.ஏ-வை காணவில்லை' என தலைப்பிடப்பட்டு ‘இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அவருக்கான சிறப்பு தகுதி இரு துறைகளில் அமைச்சராக இருந்தது'என குறிப்பிடப்பட்டுள்ளது.
10 வருட குடும்ப சொத்து ரூ.500 கோடி எப்படி?, செய்த சாதனை- தமிழகம் முழுவதும் 46 ஓட்டல்கள் எப்படி? சென்னையில் 5 ஸ்டார் ஓட்டல்கள் எப்படி?- சிறப்பு சாதனை- கடந்த நான்கரை வருடமாக தொகுதி மண்ணை மிதிக்கவில்லை. சட்டமன்ற அலுவலகத்தை திறக்கவில்லை.
தனித்திறமைகள்- நான்கரை வருடங்களாக சட்டசபையில் மவுனமாக யோகா பயிற்சி செய்தது. லட்சியம்- 2016ல் திருநெல்வேலி தொகுதியில் மீண்டும் மக்களுக்கு கும்பிடு + ரூ.15 கோடி ரெடி- பரிசாக கொடுத்து எம்எல்ஏ ஆவது.
இவரை காணாது தவிக்கும் நெல்லையில் ஓட்டுப்போட்ட மக்கள் தேடுகிறார்கள். கண்டுபிடித்து போட வேண்டிய இடம் நெல்லையப்பர் கோயில் உண்டியல், திருநெல்வேலி டவுன். வெகுவிரைவில் சொத்துக்கள் பட்டியல் வரும். இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரின் சிலையின் கீழே அந்த கட்சியின் எமஎல்ஏவை காணவில்லை என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.