பரிசு மழையில் நனையும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்!
தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் முறை மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் செயல் என்று சமூக சேவகர்கள் அதிருப்தி த
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் முறை மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் செயல் என்று சமூக சேவகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் முறை மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் நடவடிக்கை என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு சட்டசபையில் உறுப்பினர்களின் நீண்ட உரைகளும், காரசாரமான விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புகளும், உறுப்பினர்களை குண்டுகட்டாக வெளியேற்றும் நிகழ்வுகளும் மட்டுமே நடப்பதில்லை. மாறாக, எதிர்பாராதவிதமாக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தோஷப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தால் அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்கு பரிசுப்பொருள்களும் வழங்கப்படுகிறது. அரசின் இந்த நடைமுறை பொதுமக்களின் வரிப்பணத்தை இதுபோன்ற பரிசுப் பொருட்களை வாங்குவதற்காக வீனாக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே போல, பரிசுப்பொருட்கள் வழங்கும் முறை மரபுகளை உயிர்ப்புடனும் உறுப்பினர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும் என்று கூறுகின்றனர்.
சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் ஒரு துறையின் மாணியக் கோரிக்கை எடுத்துக்கொண்டு உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அது தற்போதைய சட்டப்பேரவைத் தொடர் அமர்வுகளிலும்கூட நடந்துகொண்டிருக்கிறது. தற்போது பரிசுப் பொருட்கள் மேலும் விலை உயர்ந்ததாக மாறியுள்ளன.
சட்டப்பேரவையில் செய்தியாளர்கள் அறை அருகே எதிரே உள்ள சுவர் ஓரத்தில் புதிய சூட்கேஸ்கள் அடுக்கிவைக்கப்பட்டு காணப்பட்டன. இந்த சூட்கேஸ்கள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் கூட கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் அவை பெறப்படுவதில்லை. மாவட்டக் கூட்டங்கள் மற்றும் துறை செயலாளர் அறைகளில் இருந்து கட்சிக்காரர்கள், பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் நிச்சயமாக அன்று காலை உணவு, மதிய உணவு பிரியானி வரை மெனுவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பரிசுப் பொருட்கள் டிராவல் பேக், சூட்கேஸ்கள் என்று ஒரு கலவையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
இது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், "இந்த பழக்கம் இப்போது சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது. இந்தப் பரிசு பொருட்கள் எம்.எல்.ஏ.க்களிடம் நன்றியுணர்வை தெரிவிக்கின்றன. பால்வளத் துறையின் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றும்போது, சட்டப்பேரவை கேண்டீனில் ஆவின் உற்பத்திப் பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன." என்று கூறியுள்ளார். ஆனால், "திமுக மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இந்த பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை." என்று திமுக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை குறித்து சமூக சேவகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கத்தின் நிறுவனர் ஜெகதீப் சொக்கர் கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை செய்வதற்குகூட பரிசுப் பொருட்கள் வழங்குவது என்பது ஒரு வினோதமான நடைமுறை" என்று தெரிவித்துள்ளார்.