கையில் 'வெடிகுண்டுகளுடன்' (மொபைல் போன்கள்) திரியும் மாணவர்கள்: நீதிபதி எச்சரிக்கை
சென்னை: செல்போன்கள், மாணவர்கள் கையிலிருக்கும் வெடிகுண்டுகளை போன்றது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் திவ்யா 18 சென்னை திருநின்றவூர் பகுதியிலுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்
முதலாமாண்டு படித்துவந்தார். கல்லூரிக்கு சொந்தமான ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 19ம்தேதி ஹாஸ்டல் அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். திவ்யா செல்போன் பயன்படுத்தியதை ஹாஸ்டல் வார்டன் கவுசிகா கண்டித்ததால் திவ்யா தற்கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கவுசிகா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் தன்மையை கேட்டுக்கொண்ட நீதிபதி கூறுகையில், மாணவர்கள் கையிலுள்ள வெடிகுண்டுகளைப் போன்றதுதான் செல்போன்களும். ஆபத்தின் கதவை இளைஞர்களுக்கு திறந்து வைப்பது செல்போன்கள். அப்படியிருந்தும், பிள்ளைகளுக்கு செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்ப்பதில்லை. ஏனெனில் பிள்ளைகளின் நெருக்கடிக்கும் பெற்றோர்கள் அடிபணிய வேண்டியுள்ளது.
அதிகப்படியான நேரத்தை செல்போனுடன் மாணவர்கள் செலவிடுவதால் அவர்களின் பொன்னான நேரம் வீணாகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்ப்டடுள்ள கவுசிகாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்.
வார்டன் என்பவர் தாய், சகோதரி, பொறுப்பாளர் போல நடந்துகொள்ள வேண்டியவர். எனவே தனது கண்டிப்பு எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் இயற்கையாகவே பலவீன மனதுடையவர்கள். அவர்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.