கொட்டோ, கொட்டுனு கொட்டும் தண்ணீர்... குற்றால அருவிகளில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்
தென்காசி: குற்றாலம் அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது.
ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வார முறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்குப் பருவமழை குறைந்தபின் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையினால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் திரண்டு வந்து ஆனந்தமாக அருவிகளில் குளித்து செல்கின்றனர்.
குளிர்ந்த காற்றின் பின்னணியில், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.