சுதீஷுக்காக சேலத்தில் மோடி!: கூட்டணி தலைவர்களுக்கு புகழாரம்!!- விஜயகாந்தும் பங்கேற்பு!!
சேலம்: பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடும் சேலம் லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிசராரம் செய்தார். அப்போது பாஜகவின் கூட்டணி தலைவர்களான ராதாகிருஷ்ணன், வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் தமிழகத்தில் மாற்றத்துக்கு முகமான தலைவர்களாக திகழ்கின்றனர் என்று புகழாரம் சூட்டினார் மோடி.
தமிழகத்தில் நரேந்திர மோடி இன்று சூறாவாளி பிரசாரம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரியில் பேசி முடித்த மோடி பின்னர் சேலம் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் சுதீஷ் உட்பட தேமுதிகவின் 14 வேட்பாளர்களை விஜயகாந்த், மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மோடி பேசியதாவது:
இரும்பு மனிதர் என்று போற்றப்படுகிற சர்தார் வல்லபாய் படேலின் மாநிலத்தில் இருந்து இரும்பாலை நகரமான சேலத்துக்கு நான் வந்திருக்கிறேன். இரும்பைப் போல சேலம் மக்களும் உறுதியானவர்கள். ஆனால் சேலம் மக்களின் குறைகளை கேட்கத்தான் மத்திய, மாநில அரசுகள் யாரும் இல்லை.
இந்த நாட்டு மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்.. நாட்டுக்கு தேவை டீ விற்பனை செய்வரா? நாட்டை விற்பவர்களா? என்பதை நாடு தீர்மானித்துவிட்டது. கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசுகள் செய்யாததை தேசிய ஜனநாயகக் கூட்டணி 60 மாதங்களில் நிறைவேற்றித் தரும்.
2022-ல் நாட்டின் ஏழைகள் அனைவருக்கும் வீடு, குடிநீர், கழிப்பிடவசதி, பள்ளி வசதிகள் கிடைத்துவிடும். நமது நாட்டின் பிரதமரின் குரலே கேட்கவில்லை.. அவர் எப்படி மக்களது குரலை கேட்பார்?
நாடு முழுவதும் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விவசாயக் கடனை ரத்து செய்வதிலும் கூட ஊழல் நடைபெற்றுள்ளது.
தமிழகத்துக்கு நீர், மின்சாரம் கிடைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதுணையாக இருப்போம். நதிகளை இணைக்காமல் தமிழகத்துக்கு நீர் கிடைக்காது.
தமிழகத்தின் மாற்று முகமாக வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் திகழ்கின்றனர்.
இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications