கௌதமி, காஜோலை பார்க்க நேரம் இருக்கிறது, விவசாயிகளை சந்திக்க இல்லையா? மோடிக்கு இளைஞர்கள் கேள்வி
திரைப்பட பிரபலங்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன்? என்று இளைஞர்கள் கொந்தளித்தனர்.
சென்னை: திரைப்பட பிரபலங்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன்? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வறட்சி நிவாரணத்தை அதிகரித்து வழங்குவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
31 நாள்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளையும் அழைத்து பேசவில்லை.

நிர்வாணமாக்கினர்
கடந்த 2 நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்திக்க அழைத்து செல்வதாக கூறி அய்யாகண்ணு உள்ளிட்ட 7 விவசாயிகளை டெல்லி போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது மோடியை சந்திக்க விடாமல் அந்த அலுவலகத்தில் இருந்த செயலாளரை சந்திக்க வைத்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஆங்காங்கே போராட்டம்
மோடி அரசின் செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

கத்திபாரா பாலத்தில் போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் கௌதமன் தலைமையில் கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை இளைஞர், மாணவர் அமைப்பினர் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தை போலீஸார் வலுக்கட்டாயமாக முடித்து வைத்தனர். அப்போது மாணவர்கள் மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

சிலை திறப்பு
மாணவர்கள் தெரிவித்ததாவது: சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் ஈஷா யோகா மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆதி சிவன் சிலையை திறந்து வைத்தார்.

கௌதமி, காஜோலுடன் சந்திப்பு
நடிகைகள் கௌதமி, காஜோல் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். மேலும் பாகுபலி படம் தொடர்பான நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியும் மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாதது ஏன்? நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை இப்படி கேவலப்படுத்தும் மோடி அரசை கண்டிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications