மக்கள் பிரச்னைகளை விட நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் தான் மோடிக்கு அதிக கவனம்: வைகோ
மக்கள் பிரச்னைகளை விட நாடுகள் சுற்றிப்பார்ப்பதில் தான் மோடி கவனம் செலுத்துகிறார் என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
காரைக்கால் : மக்கள் பிரச்னைகளை விட, உலக நாடுகளைச் சுற்றிப்பார்ப்பதிலேயே பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று காரைக்காலில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதில் அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. பிரதமர் மோடியும் கர்நாடகத் தேர்தலை மனதில் கொண்டு இந்த விவகாரம் குறித்து பேச மறுத்து வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழக பிரச்னை மட்டுமல்ல என்பதை மத்திய அரசு உணரவேண்டும். இதுதொடர்பாக பலமுறை வலியுறுத்தியும், மத்திய அரசு கள்ள மெளனம் காப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்.
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்கள் தண்ணீர் இல்லாமல் இருக்கும் நிலையில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பாஜக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்கிற வன்மத்தோடு மோடி அரசு செயல்படுகிறது.
மக்கள் பிரச்னை குறித்து எந்த வித அக்கறையும் இல்லாத பிரதமர் உலக நாடுகளைச் சுற்றிப்பார்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார். டெல்லிக்கு அடுத்து புதுவை மாநிலத்திலும் மத்திய அரசு ஆளுநர் மூலம் நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications