ரஜினியைப் பார்த்ததால் கோபப்பட்ட விஜயகாந்த்தை 'கூல்' பண்ண சேலத்தில் பேசிய மோடி!
சேலம்: ரஜினிகாந்த்தை நரேந்திர மோடி சந்தித்துப் பேசியதால் கோபமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சமாதானப்படுத்தும் வகையிலேயே நிகழ்ச்சி நிரலை கடைசி நேரத்தில் திருத்தி, விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடும் சேலம் தொகுதியில் பேசியுள்ளார் மோடி என்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் தமிழகத்தில் அதிக இடங்களை வாங்கிய ஒரே கட்சி தேமுதிகதான். சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி அந்தக் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை தாங்கியிருக்க வேண்டும். இருப்பினும் விஜயகாந்த் பெருந்தன்மையுடன் பாஜகவை தலைமைக் கட்சியாக ஏற்றுக் கொண்டு தமிழகம் பூராவும் தொண்டைத் தண்ணீர் வற்ற பிரசாரம் செய்து வருகிறார்.

அவரது மனைவி பிரேமலதாவும் தொகுதி தொகுதியாக போய் வருகிறார். ஆனால் திடீரென நரேந்திர மோடி சென்னைக்கு வந்து ரஜினியைப் பார்த்துப் பேசியதால் விஜயகாந்த் டென்ஷனாகி விட்டார். தனது குமுறலை அவர் நேரடியாக பாஜகவிடமே கொட்டி விட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து விஜயகாந்த்தை சமாதானப்படுத்தும் வேலையில் பாஜக இறங்கியது. முதலில் மோடியே போன் போட்டு விஜயகாந்த்துக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிரேமலதாவிடமும் வாழ்த்து சொன்னார்.
அதைத் தொடர்ந்து மோடியின் தமிழக தேர்தல் பிரசாரத் திட்டத்தில் சிறு மாற்றம் செய்து சேலத்திலும் மோடி பேசுவதாக மாற்றியமைத்தனர். சேலத்தில்தான் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதன் மூலம் விஜயகாந்ததை முற்றிலும் கூல் படுத்தி விடலாம் என்பது பாஜகவின் கணக்கு.

அதன்படியே நேற்று சேலத்தில் மோடி பிரசாரம் செய்தார். விஜயகாந்த்தும் மன மகிழச்சியோடு கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications