திருச்சியில் 50க்கும் மேற்பட்ட பாஜக பேனர்களில் மோடியின் படம் மட்டும் கிழிப்பு
திருச்சி: திருச்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் போட்டோ மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பாஜக மாநாட்டில் பங்கேற்க பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஆன்லைனில் மட்டும் 30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர விண்ணப்பங்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சியில் மோடிக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போலீசாரைக் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே திருச்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனர்களில் மோடியின் போட்டோ மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிழிந்த பேனர்களை பார்த்த பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் பேனர்கள் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.