நாளை சென்னை வருகிறார் மோடி.. பலத்த பாதுகாப்பு.. ஜெ., ரஜினியைச் சந்திப்பாரா?
சென்னை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு தமிழக காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை மோடி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல திருச்சியில் வந்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்தையும், மோடி நாளை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் சற்று கூடுதலாகவே காணப்படுகிறது.
கடந்த மாதம் 26ம் தேதி திருச்சியில் நடந்த இளம்தாமரைக் கூட்டத்தில் மோடி பேசினார். பெரும் பிரமாண்டமாகக் கூடியது. இந்த நிலையில் நாளை அவர் சென்னை வருகிறார்.

நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து சென்னை வரும் மோடிக்கு பாஜக நிர்வாகிகள் பிரமாரண்ட வரவேற்பு கொடுக்கவுள்ளனர். விமான நிலையத்திற்குப் பெரும் திரளான பாஜகவினர் வரவுள்ளனர்.
தன்னைக் காண வரும் தொண்டர்களிடம் மோடி பேசுவதற்காக சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதாவது விமான நிலையம் அருகே சிறிய மேடை அமைத்து அதில் ஏறி நின்று மோடி பேசுவாராம்.
பின்னர் தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு செல்கிறார் மோடி. அங்கு மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்குச் செல்கிறார் மோடி. அங்கு நானி பல்கிவாலா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அருண் ஷோரி எழுதிய நூலை மோடி வெளியிடுகிறார். இதில் துக்ளக் ஆசிரியர் சோவும் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் குஜராத் கிளம்பிச் செல்கிறார்.
மோடி வருகையைத் தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நரேந்திர மோடி செல்லும் பாதைகள் முழுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜெ.வை சந்திப்பாரா...?
மோடியின் நெருங்கிய நண்பர் முதல்வர் ஜெயலலிதா. சசிகலா விவகாரத்தில் அவர் ஜெயலலிதாவுக்கு நிறைய ஆலோசனைகள் கூறியதாகவும் அப்போது கதை கதையாக பேசப்பட்டது. எனவே நாளைய சென்னை வருகையின்போது ஜெயலலிதாவை மோடி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஜினி...?
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோடியைச் சந்திப்பாரா என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. ஏற்கனவே ரஜினி ஆதரவை பாஜகவினர் கோரி வருகின்றனர். உச்சகட்டமாக, திருச்சி மாநாட்டின்போது மோடியை, ரஜினி சந்திப்பார் என்றும் புரளி கிளப்பி விட்டனர்.
இந்த நிலையில் நாளை மோடி சென்னைக்கு வருவதால் ரஜினி அவரை சந்திப்பாரா என்ற பேச்சு மறுபடியும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications