அதிமுக, திமுக, பாஜகவின் கோடிகளுக்கு விலை போகாதவர் விஜயகாந்த்: சங்கரய்யா
சென்னை: சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் கோடிக் கணக்கில் பணம் தர முன்வந்தும் அதை ஏற்காதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடந்த தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
விஜயகாந்த்
சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் கோடிக் கணக்கில் பணம் தர முன்வந்தும் அதை ஏற்காதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதை அவரே ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணி
கோடிகளை ஏற்காமல் பணத்திற்கு விலை போகாத விஜயகாந்த் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தார். அவரின் நம்பிக்கை வீண் போகாது. இந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
முதல்வர்
மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவது உறுதி. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம் அளிப்பதோடு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம். தாது மணலை அரசுடமை ஆக்குவோம்.
கருத்துக்கணிப்பு
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரக் கூடாது என்று பெரு முதலாளிகள் திட்டமிட்டு கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம்.