ஏற்காடு இடைத்தேர்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ வாங்கினாலோ சிறை
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலில் ஓட்டுப்போட பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மது, வாக்களிக்க லஞ்சம் கொடுப்பவர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய, இலவசத் தொலைபேசி எண் (1800 425 7050) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுப்பவர்களின் விவரங்கள் வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலோ, பொதுமக்கள் வாக்குக்கு பணம் பெற்றாலோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். பிடிபடுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றார்.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அரசு காரில் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு நடத்தியது தொடர்பாக எனக்குப் புகார் வந்துள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் பிரவீண்குமார் தெரிவித்தார்.