தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம்: தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்
சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தென் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது' என, வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேரளாவில் வழக்கமாக, ஜூன், 1ம் தேதி, தென்மேற்கு பருவமழை துவங்கும். அதன்பின் படிப்படியாக, மற்ற மாநிலங்களுக்கு பரவும்.தமிழகம், மழை மறைவு பிரதேசமாக இருப்பதால், தென்மேற்கு பருவமழையால், 33 சதவீதம் மழையை மட்டுமே பெறுகிறது. கேரளாவை அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் மழை கிடைக்கிறது.

தென்மேற்குப் பருவமழை
இந்தாண்டு, 'தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கும்' என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாகவே, கேரளாவின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழையின் துவக்கம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கர்நாடகாவில் மழை
வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், 'தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது; அடுத்த சில தினங்களில், தமிழகத்தின் சில பகுதிகள், தெற்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை
கேரளாவில் தொடர்ந்து தென் மேற்கு பருவமழை பெய்து வருவதால், தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தர்மபுரியில் 80 மிமீ மழை பெய்துள்ளது. திருக்கோயிலூர், தாமரைப்பாக்கம் 60 மிமீ, கிருஷ்ணகிரி, உதகமண்டலம், கருமந்துறை 50 மிமீ, மாரண்டஹள்ளி 40 மிமீ, கோத்தகிரி, திருப்பத்தூர் 30 மிமீ, பள்ளிப்பட்டு, சங்கராபுரம், தொழுதூர், வால்பாறை, ராயக்கோட்டை, ராசிபுரம், பெண்ணாகரம், திருவள்ளூரில் 20 மிமீ மழை பெய்துள்ளது.

இடியுடன் கனமழை
தென்மேற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் பகுதியிலும் தென் மேற்கு பருவ மழைக்கான காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதையடுத்து கேரளா, தென் தமிழகம், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். மேலும் தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications