மசூதி நிலம் தானம்.. இந்து,முஸ்லிம் முறைப்படி சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் -எம்பி செந்தில் பாராட்டு
மயிலாடுதுறை: இஸ்லாமியர்கள் இலவசமாக வழங்கிய மசூதி நிலத்தில் இந்து, முஸ்லிம் முறைப்படி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு தருமபுரி திமுக எம்பி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் இந்து முறைபடி பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார்.
இந்து புரோகிதர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய இமாம்கள், கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் என்று கூறினார்.

வைரலான வீடியோ
இது திராவிட மாடல் அரசு என்று தெரிவித்த செந்தில்குமார், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தன்னை அழைக்க வேண்டாம் என்று கூறி பூஜையை நிறுத்திவிட்டு பணியை தொடங்கி வைத்தார். செந்தில்குமார் அதிகாரிகளை கண்டிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவும் எதிர்ப்பு
ஒரு பக்கம் செந்தில்குமாரின் செயல்பாட்டை ஆதரித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக ஆதரவாளர்கள், திராவிட, இடதுசாரி சிந்தனையாளர்களும் சமூக வலைதளங்களில் செந்தில்குமாரை பாராட்டி வருகின்றனர். அதேநேரம் பாஜக பிரமுகர்கள், இந்துத்துவா அமைப்பினர்கள் செந்தில்குமாரை கண்டித்து வருகின்றனர். பல இடங்களிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

மயிலாடுதுறை நிகழ்வு
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்ட அங்குள்ள பள்ளிவாசல் நிலத்தை இஸ்லாமியர்கள் இலவசமாக வழங்கினர். இதனை தொடர்ந்து அங்கு ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்து, இஸ்லாம் முறையில் அடிக்கல்
இந்த நிகழ்வில் கோயில் சாமியாரும், மசூதி இமாமும் அழைத்து வரப்பட்டனர். சாமியார் வேத மந்திரங்கள் முழங்க, மறுபக்கம் இமாம் துவா ஓதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு வந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள திமுக எம்பி செந்தில்குமார், "நல்லதோர் தொடக்கம். திராவிடம் = சமத்துவம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications