சேலத்தில் 41 ஜாதி அமைப்புகள் கூடி நடத்திய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு
சேலம்: சேலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 41 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவாக அரசு அறிவித்துள்ளது. இந்த 41 சமுதாயங்களை மாநில அளவில் ஒருங்கிணைத்து ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் சார்பில் மாவட்ட அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் சேலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரும், விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் தலைவருமான பொன்குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார். கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சி.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் மிகவும் பிறப்பட்டோர் சமுகத்திற்கு அரசு வேலைவாயப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அரசின் நலத்திட்ட உதவிகள் உடனே கிடைக்க வழி வகை செய்ய வேண்டும், தொழிலாளர்கள் நல வாரியத்தின் பலன் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சமுதாய தலைவர்களுக்கு பொன்குமார் விருது வழங்கி கவுரப்படுத்தினார்.
மாநாட்டில் மருத்துவர் சமூக நலச் சங்கம், ஜங்கம் சமூக நலச்சங்கம், யோகீஸ்வரர் சமுதாய பேரவை, வன்னியர் முன்னேற்ற கழகம், அகில இந்திய குலாளர் முன்னேற்ற சங்கம், உழைப்பாளி மக்கள் கட்சி (போயர் சமூகம்) உழைப்பாளி மக்கள் முன்னேற்ற கட்சி, சவரத் தொழிலாளர்கள் சங்கம், மருத்துவர் சமுதாயப் பேரவை, அகில இந்திய பிற்பட்டோர் பேரவை, வன்னியர் சங்கமம், சலவைத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், போயர் முன்னேற்ற சங்கம், பழனி மலை குன்னுவ மண்ணாடியார்கள் உறவுமுறை நலச்சங்கம், வன்னியர் சத்திரியாஸ், படையாச்சியார் வாழப்பாடியார் பேரவை, மண் பாண்டக் குலாளர் சங்கம், குறும்பர் இன முன்னேற்ற சங்கம், மவுண்டாடன் செட்டி சமுதாயச்சங்கம், பணிசிவன் (எ) வீரக்கொடி வேளாளர் சங்கம் உள்ளிட்ட 41 சமுதாயங்கனைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications