காங். உடன் கூட்டணி வைத்தால் அழிவோம்... தேமுதிகதான் சரி: நேர்காணலில் திமுகவினர்
சென்னை: காங்கிரஸ் கூட்டணி வைத்தால் கட்சியே அழிந்துவிடும் என்றும் தேமுதிகவுடனேயே கூட்டணி அமைக்கலாம் என்றும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் பெரும்பாலான திமுகவினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 29 தொகுதிகளுக்கு 900 பேரிடம் நேர்காணலை நேற்றுவரை நடத்தி முடித்துள்ளது திமுக. நேர்காணலுக்கு வருவோரிடம் பெரும்பாலும் மு.க. ஸ்டாலின்தான் கேள்விகளை கேட்டு வருகிறார். அவ்வப்போது கருணாநிதியும் இடைமறித்து கேள்வி கேட்கிறார்.

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாமா?
இப்படி கேட்கப்படும் கேள்விகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் எப்படி இருக்கும்? என்பதுதான் வழக்கமான கேள்வியாக இருக்கிறதாம். அதற்கு காங்கிரஸ் கூட்டணி வைக்கக் கூடாது என்று ஒற்றை வரியில் பதில் சொல்வோரிடம் காரணங்களை விளக்கமாக சொல்லுமாறு கேட்கிறாராம் ஸ்டாலின்.

அழிந்துவிடும் திமுக
ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடவடிக்கை, ஈழத் தமிழர் பிரச்சனை, ஏழு தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பு போன்றவற்றால் காங்கிரஸுக்கு மிகவும் கெட்ட பெயர் இருக்கிறது.. தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக காங்கிரஸ் இருப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் திமுகவும் அழிந்தேபோய்விடும் என்றும்கூட சிலர் தைரியமாக கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர்.

தொகுதி அடிப்படையில் காங். கூட்டணி ஓகே
ஓரிருவர் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என தொகுதி நிலவரத்தின் அடிப்படையில் கூறியுள்ளனர். காங்கிரஸுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக் கூடாது என்பதுதான் நேர்காணலுக்கு வந்து செல்லும் திமுகவினரின் பொதுவான கருத்தாக இருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

தேமுதிகதான் சரி
அதேபோல் தற்போதைய நிலையில் காங்கிரஸுடன் முயற்சிக்காமல் தேமுதிகவுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் திமுகவினர் நேர்காணலில் கூறிவருகின்றனராம். தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதுதான் திமுக நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications