காங். - பாஜக வேண்டாம்.. தேமுதிகவையும் ஒதுக்குவோம்.. திமுக தலைவர்கள் பல குரலில் கருத்து
சென்னை: மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவே கூடாது. அந்தக் கூட்டணியை மறந்து விட வேண்டும். அது திமுகவுக்குப் பாதகத்தையே ஏற்படுத்தும் என்று பொதுக்குழுவில் பேசிய பல தலைவர்களும் ஆணித்தரமாக வலியுறுத்தினர்.
இந்த வலுவான எதிர்ப்பு காரணமாகவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பதாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம், திருச்சி சிவா எம்.பி., முன்னாள் தமிழக அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் ஒரு ஆலோசனை
நேற்று திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கினார்.

துரைமுருகன முதல் பேச்சு
துரைமுருகன் கூட்டத்தின்போது முதலில் பேசினார். அவர் கூறுகையில்,வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடிஉள்ளது. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது. பத்திரிகைகளும் ஆவலாக உள்ளன. தேர்தல் எப்போது வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் கட்சிதான் தி.மு.க. இதில் யாருக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை. தி.மு.க.வுக்கு பொதுக்குழு என்பது இதயம் போன்றது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம்.தனது கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் இயக்கம் அல்ல. சாதாரண விஷயத்துகே தலைவர் கலைஞர் 4 பேரின் கருத்தை கேட்பது வழக்கம்.அப்படிப்பட்ட கழகத்தின் பொதுக்குழு கூடிஉள்ளது. உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அனைவரும் தத்தமது கருத்துக்களை தலைவர் முன்பு எடுத்து வைக்கலாம் என்று அறிவித்தார். அதையடுத்து அனைவரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

திமுக மீது புகார் கூறிய குத்தாலம் கல்யாணம்
குத்தாலம் கல்யாணம் பேசுகையில், திமுகவுக்கு எதிராகச் சொல்லப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு 2-ஜி அலைக்கற்றை ஊழல். இது தொடர்பான உண்மை நிலையை மக்களிடம் திமுக கொண்டு செல்லவே இல்லை. தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி, அலைக்கற்றையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. அரசுக்கு நஷ்டம் என்பதையே ஊழல் என்கின்றனர் என்று விளக்க வேண்டும்.

தனித்துப் போட்டியிடுவோம்- பாஜகவும் வேண்டாம்
முரசொலி மாறன் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் கூட்டணியைப் பற்றிப் பேசாமல், தனித்து நின்று ஜெயிக்க முயற்சிக்க வேண்டும் என்பார். பாஜகவுடன் நாம் அமைப்பது கொள்கை ரீதியான கூட்டணியாக இருக்க முடியாது. காங்கிரஸூடனும் கூட்டணி வேண்டாம். தனித்தே போட்டியிட வேண்டும் என்றார்.

பாஜகவுக்கு துறைமுகம் காஜாவும் எதிர்ப்பு
துறைமுகம் காஜா பேசுகையில், பாஜகவுடன் திமுக முன்பு சந்தர்ப்பவசத்தால் கூட்டணி அமைத்தது. காங்கிரஸூடன் அதிமுக அப்போது கூட்டணி அமைத்துவிட்டதால், வேறு வழியில்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம்.

தோள் மீ்து கை போட்டுக் கவிழ்த்த காங்கிரஸ்
காங்கிரஸ் நம் தோளின் மீதே கையைப் போட்டுக்கொண்டு நம்மைக் கவிழ்த்தது. அலைக்கற்றை ஊழலில் நம் மீது இல்லாத பழியைச் சுமத்தியது. அதனால் காங்கிரஸூடனும் கூட்டணி வேண்டாம்.

மரியாதை தெரியாத விஜயகாந்த்தும் வேண்டாம்
நடிகர் (விஜயகாந்த்) கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். திமுகவுக்கு அந்த நடிகர் மரியாதையே கொடுப்பது இல்லை. தனித்தே போட்டியிடுவோம் என்றார் அவர்.

சிபிஎம்முடன் சேர சிவராமன் ஆதரவு
பொதுக்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமன் பேசுகையில், பாஜக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது வரை ஓரளவு நடுநிலையுடன்தான் இருந்து வருகிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது சிறப்பாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். மறைந்தபோது செய்தது போல
89-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அதிமுக இரண்டாக பிரிந்திருந்த நேரம். அப்போது நடந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு மட்டும் கூட்டணி அமைத்து திமுக தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றோம். அதே வெற்றியை மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் தற்போதும் பெற முடியும்.

அழுத்தம் திருத்தமாக எதிர்த்த அன்பழகன்
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பேசுகையில், காங்கிரஸூடன் கூட்டணி வேண்டாம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறேன். தேமுதிகவை அதிமுக ஒதுக்குகிறது.

தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லாமல் செய்வோம்
அதேபபோல திமுகவும் ஒதுக்கிவிட்டால், தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லாமல் செய்துவிடலாம். பாஜகவிடம் கூட்டணிக்காக நாம் போக வேண்டாம்.

பாஜகவே தேடி வந்தால் சேரலாம்
ஆனால், பாஜகவே கூட்டணிக்காக வந்தால் சேரலாம். அதேசமயம் பாஜக ஆட்சி அமைத்தால் திமுக வெளியில் இருந்துதான் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவையில் இடம்பெறக் கூடாது.

பேசிக் கொண்டே ரெய்டு நடத்திய காங்...
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வேண்டாம். 63 சீட்டுக்குப் பேரம் பேசிக் கொண்டே சிபிஐ ரெய்டு நடத்தியது காங்கிரஸ். அலைக்கற்றை ஊழலில் திமுகவினரை குற்றவாளிகள் போல் ஆக்கி, சுமார் 20 மாதம் வரை நம் கட்சியினரைச் சிறையில் அடைத்தனர். இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது கருணாநிதி உணணாவிரதம் இருந்தார்.

போலி கடிதம் எழுதிய காங்.
ஆனால் போர் நின்றதாக காங்கிரஸ் போலியாகக் கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்தது. ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்து காங்கிரஸ் துரோகம் செய்ததால் திமுகதான் அவப்பெயரைச் சுமந்து நிற்கிறது. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம். பாஜகவின் கொள்கைக்கும் நமக்கும் ஒத்து வராது. தனித்தே போட்டியிடுவோம் என்றார்.
இதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், மூத்த தலைவர் கே.என்.நேரு ஆகியோரும் காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்தனர்.

தனித்து நிற்க ஆதரவு அதிகம்
நேற்றைய பேச்சின்போது காங்கிரஸ் வேண்டாம் என்று கூறிய கருத்துக்களைப் போலவே பாஜகவும் வேண்டாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். தேமுதிகவையும் ஒதுக்கி விடவே பலரும் ஆதரவு தெரிவித்தனர். எனவே திமுக என்ன மாதிரியான கூட்டணியை அமைக்கும் என்ற எதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications