எப்படி இடிக்கப் போறோம்... மவுலிவாக்கம் கட்டடத்தில் காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி ஆய்வு
நாளை இடிக்கப்பட உள்ள மவுலிவாக்கம் 11 மாடி கட்டடத்தை காஞ்சி மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் நாளை இடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை அடுத்துள்ள மலிவாக்கத்தில் 11 அடுக்கு மாடிகள் 2 ஒரே நேரத்தில் கட்டப்பட்டன. இந்தக் கட்டடங்களில் ஒன்று திடீரென 2014 ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்த 61 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கட்டட இடிபாடு தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அப்போது, ஒரே நேரத்தில் கட்டப்பட்ட இரண்டு கட்டடத்தில் மற்றொன்றையும் இடித்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதனையடுத்து, மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டடம் நாளை இடிக்கப்பட உள்ளது. இந்தக் கட்டடம் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட உள்ளது. அதே நேரத்தில் கட்டடம் உள் பக்கமாக இடிந்து விழும் வகையில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு பத்திரமாக இடிக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது.
இதனைமுன்னிட்டு, இந்தப் பகுதியை சுற்றி 100 மீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மவுலிவாக்கத்தில் இடிக்கப்பட உள்ள 11 மாடி கட்டடத்தை காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன், சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் கட்டட தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளிட்டோரும் சென்று கட்டடத்தை ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications