எம்எஸ்வி உடல்நிலையில் முன்னேற்றம்.. ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்! - மகன் பேட்டி
சென்னை: இன்னும் ஒரு வாரத்தில் அப்பா நலமுடன் வீடு திரும்புவார் என அவரது மகன் கோபி தெரிவித்தார்.
மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சில நாட்களுக்கு முன்பு திடீர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார்.

உடனடியாக அவர், சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சைக்குப்பின், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உடல் நலம் விசாரித்ததுடன், அவருக்கு தன் கையால் சாப்பாடு ஊட்டியும் விட்டார்.
பி வாசு, சிவகுமார் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர்.
எம்எஸ்வியை உடனிருந்து கவனித்து வரும் அவரது மகன் கோபி இதுகுறித்து கூறுகையில், "அப்பாவின் உடல் நிலை குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி. அப்பாவின் உடல்நிலையில், இப்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு 88 வயது நடக்கிறது. பார்வையாளர்களைத் தவிர்க்கவும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில், சிகிச்சை முடிந்து அப்பா வீடு திரும்புவார்," என்றார்.












Click it and Unblock the Notifications