சென்னையில் பரபர.. பிரேக் இல்லாத பஸ்.. பாலத்தின் சுவரில் மோதி விபத்து.. பயணிகளை காப்பாற்றிய டிரைவர்
மாநகர பேருந்தில் பிரேக் பிடிக்காத காரணத்தினால் விபத்து ஏற்பட்டது.
சென்னை: சென்னை அமைந்தகரையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்தினை, பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி நிறுத்திய ஓட்டுனரின் சாமர்த்தியத்தினால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இன்று பிற்பகல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சிறிது நேரம் பெய்த மழைக்கே நகரெங்கும் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.

இந்நிலையில், வில்லிவாக்கத்திலிருந்து 47G எனும் மாநகர பேருந்து 20 பயணிகளுடன் பெசன்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் சென்றபோது, குறுக்கே ஒரு வாகனம் வந்ததால், பேருந்து ஓட்டுனர் ரவி திடீரென பிரேக் போட்டார்.
ஆனால் சாலை முழுவதும் ஈரமாக இருந்த காரணத்தினால் பிரேக் பிடிக்கவில்லை. பேருந்தோ நிற்காமல் வேகமாக அமைந்தகரை பாலத்தில் இறங்கி கொண்டிருக்கிறது. ஓட்டுனருக்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. பேருந்தின் முன்னால் நிறைய வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன. எப்படி பார்த்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சினார்.
இதனால் உயிர்சேதம் ஏதும் நடைபெற்றுவிடக்கூடாது என்று சமயோஜிதமாக நினைத்த ஓட்டுனர் ரவி, பாலத்தின்மீதே பேருந்தை மோதி நிறுத்தலாம் என முடிவெடுத்தார். அதன்படி பாலத்தின் தடுப்பு சுவரில் பேருந்தை உரசி நிறுத்தார். இதனால் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
ஆனால் இவ்வளவு யோசித்து துரிதமாக செயல்பட்ட ஓட்டுனருக்குதான் கால் முறிந்தது. வலியால் அலறினார். அப்போதுதான் பயணிகளுக்கே அவ்வளவு நேரம் என்ன நடந்தது என்று தெரியவந்தது. அதற்கு பிறகு விபத்து ஏற்படாமல் தடுத்த ஓட்டுனரை பயணிகள் அனைவரும் பாராட்டினர். இதையடுத்து காயமடைந்த ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications