ரஜினியின் அநாகரீகம், மிரட்டல்.. மன்னிப்பு கேட்க பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்தற்கு சமூக விரோதிகளே காரணம் என்றார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார் ரஜினிகாந்த்.
மிரட்டிய ரஜினி
செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி கணைகளை தொடுக்கவே கடும் கோபமடைந்த ரஜினிகாந்த், ‘ஏ‘ என ஒருமையில் கத்தியபடி, வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா என செய்தியாளர்களை மிரட்டிவிட்டு பிரஸ்மீட்டை பாதியிலேயே முடித்துக்கொண்டு வேகமாக சென்றார்.
எம்யூஜெ கண்டனம்
பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை ரஜினி மிரட்டும் வகையில் ஒருமையில் பேசியதற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாய்ந்த ரஜினி
இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினி காந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த ரஜினிகாந்த், ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார்.
கடும் கண்டனம்
அவருடைய நடவடிக்கைக்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை அனுமதிக்க முடியாது. இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினி காந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்துகிறது.