தினகரனுக்கு கிடைக்காத மூக்குப்பொடி சித்தர் ஆசி... யாருக்கு கிடைச்சிருக்கு பாருங்க!
டிடிவி. தினகரன் கிடையாய் கிடைந்தும் அவருக்கு கிடைக்காத மூக்குப்பொடி சித்தரின் ஆசி திருவண்ணாமலையில் ஒரு டீக்கடையில் இருந்தவர்களுக்கு கிடைத்துள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை : நாட்டு நடப்புகளை முன்கூட்டியே சொல்லியதால் பிரபலமடைந்த மூக்குப்பொடி சித்தரின் ஆசியை பெறுவதற்காக 2 முறை டிடிவி. தினகரன் அவரை நேரில் சந்தித்தார். ஆனால் இரண்டு முறையுமே அவருக்கு மூக்குப்பொடி சித்தர் ஆசி வழங்கவில்லை இந்நிலையில் சித்தர் திருவண்ணாமலையில் உள்ள கடைக்குள் திடீரென சென்றது பக்தர்களை குஷிப்படுத்தியுள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள் அவரின் பக்தர்கள். இவர் தற்போது திருவண்ணாமலையில் உணவகம் ஒன்றில் மாடியில் உள்ள தளத்தில் இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
சசிகலா சிறை சென்ற பின்னர் தங்களின் நிலைமை மோசமாகி வருவதால் மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெறுவதற்காக இரண்டு முறை தினகரன் அவரை சந்தித்துள்ளார். ஆனால் இரண்டு முறையுமே தினகரனுக்கு அவர் ஆசி வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மூக்குப்பொடி சித்தர் முன்பு தியானம் செய்பவரிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளை அவர் பேசினால் அது தான் அருளாசியாக பார்க்கப்படுகிறது.
தினகரனுக்கு ஆசியில்லை
இரண்டு முறையுமே தினகரனுக்கு மூக்குப்பொடி சித்தர் அருளாசி வழங்காத நிலையில். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அவர் திடீரென திருவண்ணாமலையில் உள்ள பூபதி காபி பார் என்ற கடைக்கு வந்துள்ளார். கடையை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே சென்றவர் திரும்பவும் கடைக்குள் வந்துள்ளார்.
டீக்கடைக்கு வந்த சித்தர்
பச்சை உடையில் கையில் குச்சியுடன் வந்தவர் வாசலில் இருந்த பூக்கோலத்தை பார்த்து விட்டு மீண்டும் கடைக்குள் திரும்பியுள்ளார். பின்னர் அங்கிருந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, அங்கு அமர்ந்திருந்திருக்கிறார்.
வணங்கி மகிழ்ந்த பக்தர்கள்
மூக்குப்பொடி சித்தரின் திடீர் வருகையால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர். அனைவரும் ஒரு ஓரத்தில் வந்து கைகூப்பி வணங்கிய படியே நின்றனர்.
முகநூலில் வெளியான வீடியோ
பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்த சித்தருக்கு அருகில் மூக்குப்பொடி பொட்டலங்களை வைத்து, பூவை வைத்து அவரது பக்தர்கள் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துள்ளனர். முகநூல் பக்கத்தில் மூக்குப்பொடி சித்தர் கடைக்குள் வந்து செல்லும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.