ராணிப்பேட்டை எம்எல்ஏ அலுவலகம் எதிரே தீக்குளித்த துப்புரவு ஊழியர் மரணம்!
மீண்டும் பணி வழங்க கோரி தீக்குளித்த துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.
வேலூர்: பணி வழங்காததை கண்டித்து தீக்குளித்த, ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு ஊழியர் ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு ஊழியராக பணி புரிந்து வந்தவர் ஆனந்தன். இவருக்கும், துப்புரவு ஆய்வாளர் முருகன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆனந்தன் தன்னை தாக்கியதாக, நகராட்சி ஆணையாளரிடம் முருகன் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், ஆனந்தன் கடந்த மாதம் 4ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் ஒருமாதமாகியும் தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாததால் மிகுந்த வேதனை அடைந்தார். எனவே பணியில் மீண்டும் நகராட்சி பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முருகன் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே நேற்று மாலை தீக்குளித்தார்.
இதில் 90 சதவீதம் தீக்காயமடைந்த ஆனந்தன் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆனந்தன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.