பெரியபாண்டி மனைவி,அப்பாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட இன்ஸ்பெக்டர் முனிசேகர்
ராஜஸ்தானில் கொள்ளையனை பிடிக்க நடந்த சண்டையில் பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டு விட்டதாக கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் இன்ஸ்பெக்டர் முனிசேகர்.
Recommended Video

சங்கரன்கோவில்: ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கி இன்ஸ்பெக்டர் முனிசேகர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் மனைவி பானுரேகா கூறியுள்ளார்.
கொளத்தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனி சேகர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 8ஆம் தேதி சென்றனர்.
செங்கல்சூளையில் பதுங்கியிருந்த நாதுராம் என்ற கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு உயிரிழந்தார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது.

துப்பாக்கிச்சண்டை
இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து தமிழகம் கொண்டு வரப்பட்ட பெரியபாண்டியின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரியபாண்டி பலியானது எப்படி
ராஜஸ்தான் போலீஸ் நடத்திய விசாரணையில் தமிழக போலீசார் சுட்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளும் முனிசேகரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

துளைத்த துப்பாக்கி குண்டு
முனிசேகரின் துப்பாக்கி குண்டு தான் பெரியபாண்டியின் உடலை துளைத்து இருக்கிறது என்று ராஜஸ்தான் போலீசார் கூறிய போதும் முனிசேகர் என் கணவரின் நெருங்கிய நண்பர். அவர் சுட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்ப மறுத்தார் பெரியபாண்டியின் மனைவி பானுரேகா.

மன்னிப்பு கேட்ட முனிசேகர்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியபாண்டிக்கு அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளியில் 16ஆம் நாள் காரியம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர், ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கி கூறி பானுரேகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுதாராம். அங்கிருந்த பானுரேகாவின் தந்தை வெள்ளைபாண்டியன் காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடந்த சம்பவங்களை விளக்கினார்
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பெரியபாண்டியின் மனைவி பானுரேகா, ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை விளக்கி, மனசாட்சிப்படி தன்னிடம் முனிசேகர் மன்னிப்பு கேட்டதாக கூறினார். முன்விரோதம் எதுவும் கிடையாது. இருவருமே நண்பர்கள்தான். தவறு நடந்து விட்டதாக கூறி அழுதார் முனிசேகர் என்றும் கூறியுள்ளார் பானுரேகா.

ரூ. 1 கோடி நிவாரண நிதி
முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி பெரியபாண்டி உயிரை பறித்துள்ளது. நடந்த சம்பவங்களை அறிந்து உயர் அதிகாரிகளே முனி சேகரை பெரியபாண்டி குடும்பத்தினரை சந்திக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பெரியபாண்டி இறந்ததும் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், இதுவரை அந்த நிதியும் வழங்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications