பெரியார் போன்ற தலைவர்களை அவமதிக்கும் கருத்துகளை பாஜக ஆதரிக்காது- முரளிதர ராவ்
பெரியார் போன்ற தலைவர்களை அவமதிக்கும் கருத்துகளை பாஜக ஆதரிக்காது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
டெல்லி: பெரியார் போன்ற தலைவர்களையோ அவர்களது சிலைகளையோ அவமதிக்கும் கருத்துகளையும் செயல்களையும் பாஜக ஒரு போதும் ஆதரிக்காது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
திரிபுராவில் 25 ஆண்டுகாலமாக இருந்து வந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.
பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து அகர்தலாவில் உள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது.
அர்த்தம் கொண்ட பதிவு
திரிபுராவில் 25 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்திலும் இதுபோன்ற திராவிட ஆட்சிகளுக்கு முடிவு கட்டும் போது பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்ற அர்த்தம் கொண்ட பேஸ்புக் பதிவை ராஜா பதிவிட்டிருந்தார்.
வலுத்தது எதிர்ப்பு
எச் ராஜாவுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் பதிவிடவில்லை
இந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் நேற்று அந்த கருத்தை நீக்கிவிட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு பேஸ்புக் பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்துகள் தான் பதிவிட்டதில்லை என்றும் தனது அனுமதியின்றி அட்மின் பதிவு செய்துவிட்டார் என்றும் விளக்கம் தெரிவித்தார்.
|
மேலிடம் கருத்து
இந்நிலையில் எச் ராஜாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறிய நிலையில் இன்று டுவிட்டரில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார் போன்ற தலைவர்களை அவமதிக்கும் விதமாகவோ அவமதிப்பதை ஊக்குவிக்கும் விதமாகவோ மரியாதை குறைவாகவோ சொல்லப்படும் கருத்துகளை பாஜக ஆதரிக்காது என்று தெரிவித்தார்.