காமராஜர் காலத்தில் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.. சொல்கிறார் பாஜக முரளிதர ராவ்!
காமராஜர் காலத்திலேயே பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதாக பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை: காமராஜர் காலத்திலேயே பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதாக பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். திமுகவும் பால் வழங்குவதற்கு ஆதரவாக பேசினாலும் மாட்டு இறைச்சி விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மதுரை தனியார் ஓட்டலில் பாஜக தேசிய செயலாளார் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் பண்டிட் தீனதயாள் விழாவிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். அரசியல் கட்சிகளில் இருந்து பாஜகவை மக்கள் ஊழல் இல்லாத கட்சியாக பார்க்கின்றனர் என்றார்.

மத்தியில் நல்லாட்சி கொடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், அடிமட்ட தொண்டர்கள் முதல் மேல்மட்டம் வரை கட்சியின் வளர்ச்சி முக்கியம் என்றார். கிராம மற்றும் நகர பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தூய்மை இந்தியா திட்டம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்சியை மேம்படுத்துவதை மிகவும் முக்கியமாக கருதுகிறோம். மக்கள் ஊழலற்ற கட்சி மற்றும் ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் முரளிதர ராவ் கூறினார்.
6 ஆயிரம் பேர் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்சிக்காக சமூக தளங்களில் பணியாற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மக்கள் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்றும் முரளிதர ராவ் கூறினார்.
குறைந்தபட்சம் 15 நாட்கள் தங்கியிருந்து கட்சிப் பணியாற்ற உள்ளதாக கூறிய அவர் கட்சியின் பூத் கமிட்டியினரை சந்த்திக்க இருப்பதாக தெரிவித்தார். பல பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் மோடி நல்ல ஆட்சி வழங்குவதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
காமராஜர் காலத்தில் பசுவதை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் முரளிதர ராவ் கூறினார். நாட்டு மாடு பாலை பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தால் என்ன தப்பாகிவிடும் என்று கேள்வி எழுப்பிய அவர், எருமை பாலை விட பசுவின் பால் சிறந்தது என்றார்.
திமுகவும் பால் வழங்குவதற்கு ஆதரவாக பேசினாலும் மாட்டு இறைச்சி விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் முரளிதர ராவ் குற்றம்சாட்டினார். மத்திய அரசு பிடிவாதமாக எதையும் செய்வதில்லை என்ற அவர் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் சாமானிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்காக மட்டுமே என்றார்.
ஜி.எஸ்.டி சாமானிய மக்களுக்கானதே என்றும், மத்திய அரசு இதனை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அவர் கூறினார். இன்னும் சில மாதங்களில் சிறு பிரச்சைகளும் தீர்ந்து போகும் என்றும் முரளிதர ராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications