அப்பா என்று அழைக்கவா... கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய முதல் குழந்தை' முரசொலி!
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அவர் உருவாக்கிய முரசொலி அஞ்சலி செலுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அவருடைய மற்றொரு பிள்ளையான முரசொலி கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்துள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட திமுக தலைவர் கருணாநிதி நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தேர்ந்த அரசியல் தலைவர், கட்சித் தலைவர், சிறந்த நிர்வாகி என்று பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி, மிகச் சிறந்த பத்திரிகையாளரும்கூட.
1942 ஆகஸ்ட் 10ம் தேதி முரசொலி பத்திரிகையை துவக்கினார் கருணாநிதி. எவ்வளவு கட்சிப் பணிகள், அரசுப் பணிகள் இருந்தபோதும், முரசொலியில் கருணாநிதியின் பங்கு இல்லாமல் இருக்காது. உடன்பிறப்புகளுக்கான கடிதம் முதல் முரசொலியில் அவருடைய கைவண்ணம் எப்போதும் வியாபித்திருக்கும்.
முரசொலியை தன்னுடைய முதல் பிள்ளை என்று கருணாநிதி பலமுறை கூறியுள்ளார். இன்று அவருடைய உடலுக்கு அருகில், இன்றைய முரசொலி பத்திரிகை வைக்கப்பட்டிருந்தது அதற்கு அத்தாட்சியாகும்.
இன்றைய முரசொலியின் முதல் பக்கத்தில், திராவிட இயக்க வைரத்தூண் - ஓய்வறியைப் போராளி - தலைவர் கலைஞர் மறைந்தார் - தமிழினமே கண்ணீர்க் கடலில் மிதக்கிறது என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
அதே பக்கத்தின் கீழே, ஒரே ஒரு முறை இப்போதாவது, அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் உருக்கமான கண்ணீர் கடிதம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கடிதத்தையும் முதல் பக்கத்தில் வெளியிட்டு, பாசமிகு தந்தைக்கு ஸ்டாலினும் இணைந்து முரசொலியும் அஞ்சலி செலுத்தியுள்ளது.
வரும் 10ம் தேதி 77வது ஆண்டை முரசொலி நிறைவு செய்ய உள்ள நிலையில், அதை உருவாக்கிய பாசமிகு தந்தை கருணாநிதி உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவு முரசொலிக்கு மட்டுமல்ல பத்திரிகை உலகுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். ஒவ்வொரு நாளும் பத்திரிகையை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வருவது என்பது ஒரு பிரசவத்துக்கு ஈடானது என்பது பத்திரிகையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபடும் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளனின் மன உணர்வாகும். அந்த உணர்வை, கடந்த 76 ஆண்டுகளாக சுமந்துள்ளார் கருணாநிதி.