திகில் நகரமாகும் மதுரை: 24 மணிநேரத்தில் 5 கொலைகள்- பீதியில் மக்கள்
மதுரை: மதுரையில் வியாழக்கிழமை இரவு 2 கொலைகள், வெள்ளிக்கிழமை மதியம் 3 கொலைகள் என 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 5 கொலைகள் நடந்துள்ள சம்பவம் அச்சத்தில் ஆழ்த்துள்ளது. தூங்கா நகரமான மதுரை மாநகரம் கொலை நகரமாக மாறி வருவதால் மதுரைவாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
மதுரையில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் புதூர் பகுதியை சேர்ந்த வேலுவின் மகன் முத்துப்பாண்டி(31) 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் திமுக இளைஞரணி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
தல்லாகுளம் பகுதியில் வியாழன் இரவு 10 மணியளவில் பந்தல் அமைப்பாளர் கருப்பையா(32) என்பவரை 2 ஆட்டோக்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.
3 கொலைகள்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மதியம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பழிக்குப்பழியாக நடந்த சம்பவத்தில் மேலும் 3 பேரை, 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பட்டப்பகலில் வீடு புகுந்து வெட்டியது. இதில் பாம்பு நாகராஜா(19), அவரது தம்பி கருப்புராஜா(15) மற்றும் இவர்களது நண்பர் கார்த்திக்(22) ஆகியோர் ரத்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரவுடிகள் ராஜ்ஜியம்
வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியில், குறுகலான தெருவில் சர்வ சாதாரணமாக அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஊர்வலமாக வந்து இந்த கும்பல் 3 பேரையும் வெட்டி சாய்த்துள்ளது.
அடுத்தடுத்து 5 கொலைகள்
கொலை செய்த பின்னர் சாதாரணமாக நடந்து சென்று விட்டனர். இது மதுரை மக்களுக்கும், போலீசாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்துள்ள 5 கொலைகள் பொதுமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூலிப்படைகள்
மதுரை நகரில் ஜெய்ஹிந்துபுரம், பெத்தானியாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகள், குட்டி தாதாக்கள் அதிகமானோர் உருவெடுத்து வருகின்றனர். இவர்களுக்குள் யார் பெரியதாதா என்பதை நிரூபிக்க அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.
இவர்களால் கூலிப்படைகள் உருவாகின்றன.
இளம் ரவுடிகள் அதிகம்
18 வயது கூட நிரம்பாதவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கும்,ரூ.10 ஆயிரத்துக்கும் அரிவாளை கையில் எடுத்து கூலிப்படையாக மாறி வருகின்றனர். பின்னர் வயது ஏற, ஏற அவர்களும் ரவுடிகளாக அவதாரம் எடுக்கின்றனர்.
நேற்று மதியம் நடந்த கொலைகளும், இந்த பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் அப்பளராஜா மற்றும் குண்டுமணி தரப்பினருக்கு இடையே நடந்து வரும் தொழில் போட்டியால்தான் நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கோவில் நகரமா? கொலை நகரமா?
குண்டுமணி தரப்பை சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு பழிக்குப்பழி வாங்கவே இவர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தல்லாகுளம் பகுதியில் பந்தல் அமைப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர், நேற்று மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மற்ற கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்களும் அடுத்தடுத்து அருகே உள்ள நகரங்களின் நீதிமன்றங்களில் சரணடைந்து விடுவார்கள். கோவில்கள் நிறைந்துள்ள மதுரை மாநகரம் கொலை நகரமாக மாறிவருவது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.