ரித்தீஷ் மீது தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கொலை மிரட்டல் புகார்
சென்னை: நடிகர் ரித்தீஷ் தன் பழைய கூட்டாளியான திமுகவை சேர்ந்த பூச்சிமுருகனுடன் சேர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மாலை ஏராளமான திரை உலக மற்றும் நாடக உலக நடிகர்-நடிகைகள் திரண்டு வந்தனர். நடிகர் எம்.ஏ. கிச்சா ரமேஷ் தலைமையில் வந்த அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிச்சா ரமேஷ், நான் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரில் வசிக்கிறேன். சினிமாவில் நடித்து வருகிறேன். நடிகர் சங்க உறுப்பினராக உள்ளேன். இங்கு வந்துள்ள அனைவரும் நடிகர் சங்க உறுப்பினர்கள்தான். நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம். அவருக்கு ஓட்டும் சேகரித்து வருகிறோம்.
இதனால் எதிர் குழுவைச் சேர்ந்த நடிகர் ரித்தீஷ், பூச்சிமுருகன் மற்றும் நடிகர் விஜய் கார்த்திக் ஆகியோர் எங்களை ஏற்கனவே மிரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் எனது செல்போனில் வட பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல பேசி நடிகர் ரித்தீஷ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ரித்தீஷ் ஏற்கனவே தி.மு.க.எம்.பி.யாக இருந்தவர். இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த பூச்சிமுருகனுடன் சேர்ந்து எங்களை மிரட்டுகிறார்.
ரித்தீஷ் மிரட்டிய பேச்சை செல்போனில் பதிவு செய்து அதை சி.டி.யாக போட்டு போலீசாரிடம் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கிச்சா ரமேஷ் உடன் வந்திருந்த மற்ற நடிகர்-நடிகைகளும் தங்களுக்கும் மிரட்டல் வருவதாக தெரிவித்தனர். இதுபோன்ற புகார் மனுக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.