போன வருஷம் சென்னையில் ‘கொலை’ கொஞ்சம் கம்மிதானாம்... கூடுதல் கமிஷனர் தகவல்!
சென்னை: சென்னையில் 2013-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, கடந்தாண்டு 20 சதவீதம் கொலைச் சம்பவங்கள் குறைந்திருந்ததாக கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தித்தாளை திறந்தாலே கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தான் அதிகம் கண்ணில் தென்படுவதாக நொந்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால், சென்னையில் கடந்தாண்டு கொலைச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார். அப்போது அவர் கூறியதாவது :-

கொலைச் சம்பவங்கள் குறைவு...
சென்னை நகரில் கடந்த 2013-ம் ஆண்டோடு, 2014-ம் ஆண்டை ஒப்பிட்டு எவ்வளவு கொலைச்சம்பவங்கள், எதற்காக நடந்துள்ளது என்று ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் 2013-ஐவிட 2014-ல் 20 சதவீதம் கொலைச்சம்பவங்கள் குறைந்துள்ளது தெரிய வந்தது.

200 கொலைகள்...
2013-ல் 200 கொலைச்சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. அதில் ஆதாயத்துக்காக 13 கொலைகளும், ரவுடியிசத்தால் 45 கொலைகளும், குடும்பத்தகராறு காரணமாக 32 கொலைகளும், கள்ளக்காதல் விவகாரத்தால் 18 கொலைகளும் நடந்துள்ளன.

161 கொலைகள்...
2014-ம் ஆண்டில் 161 கொலைகள்தான் நடந்துள்ளன. இதில் ஆதாய கொலைகள் 12, ரவுடியிச கொலைகள் 37, குடும்பத்தகராறு கொலைகள் 25, கள்ளக்காதல் கொலைகள் 18 நடந்துள்ளது. திடீர் மோதலில் 29 கொலைகள் நடந்துள்ளது.

குண்டர் சட்டம்...
குண்டர் சட்டத்தில் அதிக அளவில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும், ரோந்து பணி, செக்டார் போலீஸ் அறிமுகம் போன்ற நடவடிக்கைகளால் கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளன.

கைது...
2013-ல் 2,133 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டனர். 2014-ம் ஆண்டில் 2,313 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். ரவுடிகள் மட்டும் 1,341 பேர் 2014-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் சிறைக்குப்போய் இருக்கிறார்கள்.

நடவடிக்கை...
புளியந்தோப்பு துணை கமிஷனர் சரகத்தில் 2013-ல் 29 கொலைகள் நடந்தன. ஆனால் 2014-ல் அங்கு 9 கொலைகள் மட்டுமே நடந்திருக்கிறது. அம்பத்தூர் துணை கமிஷனர் சரகத்தில்தான் 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தொடர்ந்து தலா 26 கொலைகள் அரங்கேறி இருக்கிறது. அங்கு கொலைச்சம்பவங்களை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1 லட்சம் புகார்கள்...
பொதுமக்களிடம் இருந்து 2014-ம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேல் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2013-ல் 55 ஆயிரம் புகார்கள்தான் வந்தன' என்றார்.
இந்த பேட்டியின்போது இணை கமிஷனர் வரதராஜூ உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications