திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருட்டு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முருகன் சிலை சூலம் திருடுபோனது தொடர்பாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெண்கலத்தாலான தண்டாயுதபாணி சிலையும் சூலமும் திருட்டு போயுள்ளதாக கோயில் இணை ஆணையர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்திபெற்றது. இந்த கோயில் இருப்பு அறையில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த பல சிலைகளும் கோயில் சிலைகளும் உள்ளது. அண்மையில், அண்ணாமலையார் கோயிலுக்கு புதிதாக வந்த இணை ஆணையர், கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பட்டியலை பரிசோதனை செய்துள்ளார். அப்போது கோயிலில் உள்ள சிலைகளின் இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பித்தளையால் ஆன தண்டாயுதபாணி சிலையும் ஒரு பித்தளை சூலமும் இருப்பு அறையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காணாமல் போயுள்ள தண்டாயுதபாணி என்கிற முருகன் சிலை 1957 ஆம் ஆண்டு ஒரு பக்தர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அதே போல, காணாமல் போன சூலம் 1982 ஆம் ஆண்டு ஒரு பக்தரால் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில், தண்டாயுதபாணி சிலை மற்றும் சூலம் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்த இணை ஆணையர் ஞானசேகர் இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. பொன்னியிடம் கோயில் இருப்பு அறையில் இருந்து சிலைகள் திருடப்பட்டு இருப்பதை புகாராக அளித்தார். புகாரில் தண்டாயுதபாணி சிலை பித்தளை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கோயிலில் உள்ள ஒரு சிலர் அதை வெங்கல சிலை என்று கூறுகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிலை திருடு போயிருப்பது குறித்த புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. இந்த வழக்கை திருவண்ணாமலை டவுன் போலீஸ் விசாரிப்பதா? அல்லது குற்றப்பிரிவு போலீஸ் விசாரிப்பதா? அல்லது சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதா என்று ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.