இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காக்க தமிழக அரசு என்றும் துணை நிற்கும்: அமைச்சர் வேலுமணி
இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என வேலுமணி கூறினார்.
கோவை: இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காக்க தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என கோவையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
கோவையில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக குனியமுத்தூர் தாஜூல் இஸ்லாம் பள்ளிவாசலில் இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், ராம் நகர் ஆசிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, இஸ்லாம் மத முக்கிய கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பை மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்களுக்கு அ.தி.மு.க சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, என்றைக்கும் சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய மக்களின் அரணாக செயல்படும் அரசாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் நோன்பு வைத்திருந்தவர்களுக்கு என பேரீச்சை, பழங்கள் மற்றும் கஞ்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து தொழுகைக்கு பிறகு அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை காவல்துறை தெற்கு உதவி ஆணையர் ரமேஷ் கண்ணன்,காவல் ஆய்வாளர் கணேஷ் உட்பட 500 க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.