நீங்க, தொலைந்த சனியனுடன் கூட்டு சேர்ந்தவர்.. இளங்கோவனுக்கு முத்தரசன் அட்டாக் பதில்!
சென்னை: எங்கள் கூட்டணியில் யாராவது ஒருவர் மரணமடையவேண்டும் என்று இளங்கோவன் விரும்புகிறார். தொலைந்த சனியனுடன் கூட்டணி வைத்திருக்கும் இளங்கோவனுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
சமீபத்தில் மக்கள் நலக் கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அந்த கூட்டணியில் 6 பேர் இருக்கின்றார்கள். 6 பேர் என்றால், 4 பேர் தூக்குவதற்கு. ஒருவர் அதில் படுத்துக் கொள்வதற்கு. இன்னொருவர் அதில் சங்கு ஊதுவதற்கு. அதுதான் 6 பேர் கொண்ட கூட்டணி என்று கூறினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த கருத்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை பெரிதும் கொதிப்படையவைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன், சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சனியன் தொலைந்தது என்று கூறும் அளவிற்கு நாகரீகமாக பேசக்கூடியவர்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்கள் நலக்கூட்டணியில் யாராவது ஒருவர் மரணமடைய வேண்டும் என்று இளங்கோவன் விரும்புகிறாரா? என்ற கேட்டார்.
சனியன் தொலைந்தது என்ற இளங்கோவனுக்கு கூடா நட்பு கேடாய் முடியும் என்று பதிலளித்தவர் கருணாநிதி. இன்றைக்கு தொலைந்த சனியனும் கேடாய் நட்பளிக்கக் கூடியவர்களும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். இருவருமே ஊழல் கட்சிகள்தான். இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று முத்தரசன் தெரிவித்தார்.