திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட மறுத்த முத்தரசன்?
சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் போட்டியிட மறுத்ததாகவும் இதனால் அக்கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கும் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் திருவாரூர் தொகுதியில் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் தாம் போட்டியிட தயார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் கூறியிருந்தார். தற்போது முத்தரசன் தேர்தலில் போட்டியிட மறுத்ததாகவும் இதனால் கட்சிக்குள் அவர் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முத்தரசனுக்கு நெருக்கடி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது கருணாநிதி; ஆகையால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்தான் அங்கு போட்டியிடவேண்டும் என விவாதிக்கப்பட்டது. மேலும் பெரும்பான்மையோர் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

போட்டியிட மறுப்பு
ஆனால் முத்தரசனோ திருவாரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை. எனது பெயர் கட்சியின் நிர்வாக கமிட்டியின் பரிசீலனையில் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இது அக்கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தா.பா. ஆவேசம்
அத்துடன், ஒரு மாநில செயலாளரே முக்கியமான தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை என சொல்லுவது சரியானது அல்ல. இந்த மக்கள் நலக்கூட்டணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை ஏற்கவில்லை என்று கொந்தளித்தாராம் மூத்த தலைவர் தா.பாண்டியன்.

கருணாநிதிக்கு எதிராக மாசிலாமணி
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணி பொறுப்பாளரான மாசிலாமணியை திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கேற்ப இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலிலும் திருவாரூரில் மாசிலாமணிதான் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications